செய்திகள்
கைது

பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு- திண்டுக்கல் வாலிபர் கைது

Published On 2021-10-13 04:31 GMT   |   Update On 2021-10-13 04:31 GMT
முகநூலில் போலி கணக்கு மூலம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக திண்டுக்கல்லை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் முகநூலில் கணக்கு வைத்து உள்ளார். இந்த நிலையில் அவருக்கு செல்போனில் அடிக்கடி விபச்சார அழைப்புகள் வந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், மதுரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணி மேற்பார்வையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்மிங் ஒய்ஸ்லின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது.

அப்போது யாரோ ஒருவர் முகநூலில் போலி கணக்கு ஒன்றை தொடங்கி, அதில் உசிலம்பட்டி பெண்ணின் போட்டோ மட்டும் செல்போன் நம்பரை பதிவேற்றம் செய்து இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து சைபர் கிரைம் போலீசாரின் தேடுதல் வேட்டையில் அந்த நபர், திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரசாத் என தெரிய வந்தது. உசிலம்பட்டி பெண்ணின் பெயரில் முகநூலில் போலி கணக்கு உருவாக்கி பாலியல் தொந்தரவு செய்ததாக, பிரசாத்தை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், “மதுரை மாவட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் சைபர் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இதில் யாரேனும் பாதிக்கப்பட்டால் அச்சம், தயக்கம் இன்றி போலீசாரிடம் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News