செய்திகள்
லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் மோசம்- டாக்டர்கள் தகவல்
பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ராஞ்சி
பீகார் முன்னாள் முதல்-மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் மாட்டு தீவன ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவர் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், சிறுநீரகம் மற்றும் இதர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கடந்த ஒரு வருடமாக ராஞ்சியில் உள்ள ஆர்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் கடுமையாக சிறுநீரக பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மூத்த மருத்துவர் உமேஷ் பிரசாத் கூறினார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
லல்லு பிரசாத்தின் சிறு நீரகங்கள் சரிவர செயல்பட வில்லை. அவரது ரத்தத்தில் சர்க்கரையின் அளவும், ரத்த அழுத்தத்தின் அளவும் சீராக இல்லை. அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் இல்லை. அவர் எடுத்துக் கொள்ளும் உணவின் அளவும் குறைந்துள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.