செய்திகள்
ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி

நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை - கொல்லிமலை ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை

Published On 2019-12-02 10:21 GMT   |   Update On 2019-12-02 10:21 GMT
நாமக்கல் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
கொல்லிமலை:

வடகிழக்கு பருவமழையின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று முன்தினம் முதல் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, எருமப்பட்டி, புதுச்சத்திரம், மோகனூர், நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிப்பாளையம்  உள்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக சாலைகளில் வாகன ஓட்டிகள் பகலிலும் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு மெதுவாக வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். காலை முதல் இரவு வரை குளுகுளு சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

பிரசித்தி பெற்ற சுற்றுலாதலமான கொல்லிமலையில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால்   ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிப்பதற்கு தடைவிதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதுபோல் கொல்லிமலையில் உள்ள மாசிலா அருவி, நம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளுக்கு செல்வதற்கும், குளிப்பதற்கும், கொல்லிமலை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்த தடை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் கொட்டிய மழை விபரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-
கொல்லிமலை - 25,
சேந்தமங்கலம் - 32,
எருமப்பட்டி - 47,
புதுச்சத்திரம் - 22,
மோகனூர் - 9,
கலெக்டர் அலுவலகம் 43.30,
நாமக்கல் - 57,
ராசிபுரம் - 15.20,
குமாரபாளையம் - 5.20,
மங்களபுரம் - 11,
பரமத்திவேலூர் - 10,
திருச்செங்கோடு - 2.
Tags:    

Similar News