கூட்டு பாலியல் பலாத்காரம்- கோவை மாணவி கோர்ட்டில் வாக்குமூலம்
கோவை:
கோவை சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-1 மாணவி கடந்த 26-ந் தேதி தனது காதலருடன் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் மாணவியை மறைவான இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது குறித்து மாணவியின் பெற்றோர் மேற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்த சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (30), பப்ஸ் கார்த்தி (28), ராகுல் (21), பிரகாஷ் (22), கார்த்திகேயன் (28), நாராயண மூர்த்தி (32) ஆகிய 6 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது போக்சோ சட்டம், கொலை மிரட்டல், பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 4 பேரையும் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கோவை மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த 9-ந் தேதி மகிளா கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் ஆஜரான பாதிக்கப்பட்ட பிளஸ்-1 மாணவி நடந்த சம்பவம் குறித்து ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார்.
அதே நாளில் குற்றவாளியான மணிகண்டனை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மேற்கு அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அவர் போலீசாரிடம் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 பேர் தெரிவித்த அதே தகவலையே வாக்குமூலமாக அளித்தார். விசாரணை முடிந்ததும் போலீசார் மணிகண்டனை மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர்.