செய்திகள்
கொலை செய்யப்பட்ட காட்டுராஜா, காசியம்மாள்

திமுக முன்னாள் ஊராட்சி தலைவரின் பெற்றோர் உயிரோடு எரித்துக் கொலை

Published On 2021-09-13 06:04 GMT   |   Update On 2021-09-13 08:56 GMT
காட்டுராஜாவின் 3-வது மகன் குமார் என்பவரின் 16 வயது மகன் வீட்டை பூட்டி வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள கொத்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா (வயது 75). விவசாய கூலி தொழிலாளி. இவருடைய மனைவி காசியம்மாள் (65). இருவரும் அதே பகுதியில் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு தேசிங்கு ராஜா, மணி, குமார் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

தேசிங்கு ராஜா (51) தி.மு.க.வில் இருந்து வருகிறார். இவருடைய மனைவி ராணி. கடந்த முறை தேசிங்குராஜா, கொத்தாம்பாடி ஊராட்சி மன்ற தலைவராக பணியாற்றியவர் .

இவருடைய பெற்றோர் காட்டுராஜா- காசியம்மாள் வசித்து வரும் வீடு கூரை மற்றும் தகரத்தால் வேயப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் வீட்டில் காட்டுராஜா அவரது மனைவி காசியம்மாள் இருவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் இருந்து 2 பேரையும் காப்பாற்ற முற்பட்டனர். தீப்பிடித்து எரிவதை பார்த்த காட்டுராஜா, காசியம்மாளும் கதவை திறக்க முயன்றனர். ஆனால் வீட்டின் வெளிப்புற கதவு பூட்டப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டிருந்ததால் அவர்களால் வெளியே வர முடியவில்லை.

 


மேலும், கூரை வீடு என்பதால் தீ வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனால் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. தொடர்ந்து தீ வீட்டுக்குள் பரவியது. அங்கிருந்த துணிகள், பொருட்கள் அனைத்திலும் தீ பிடித்து வீடு முழுவதும் தீ வேகமாக எரிந்தது. தீயின் கோரத்தால் தம்பதி அங்கும், இங்குமாக ஓடினர். இருவர் உடலிலும் தீ பிடித்து பற்றி எரிந்தது. தீயில் சிக்கி தம்பதி காட்டுராஜா, காசியம்மாள் அலறினர்.

கதவு, கட்டளை கொளுந்து விட்டு எரிந்ததால் பக்கத்தில் செல்ல முடியவில்லை. கடும் சிரமத்திற்கு இடையே அக்கம் பக்கத்தினர், வீட்டுக்குள் இருந்து 2 பேரையும் காப்பாற்ற தொடர்ந்து முயற்சி செய்தனர். தீயணைப்பு வீரர்கள் வரும்வரை வீட்டின் மீது தொடர்ந்து தண்ணீரை ஊற்றி அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து உள்ளே சென்று பார்த்தனர். இந்த நிலையில் சம்பவ இடத்திலேயே காட்டு ராஜா, தீயில் கருகி கரிக்கட்டையானார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காசியம்மாள் அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது பற்றி தகவல் அறிந்த போலீஸ் சூப்பிரண்டு அபினவ்ஸ்ரீ, ஆத்தூர் டி.எஸ்.பி. இம்மானுவேல் ஞானசேகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காட்டுராஜாவின் 3-வது மகன் குமார் என்பவரின் 16 வயது மகன் வீட்டை பூட்டி வீட்டிற்கு தீ வைத்துள்ளார் என்பது தெரிய வந்தது.

குமார் அடிக்கடி தனது மனைவியை அடித்து துன்புறுத்துவதை பார்த்த அவரது மகன், என் தாயை நீ எப்படி அடிக்கலாம் என குமாரிடம் கேட்டுள்ளார். மேலும் ஆத்திரமடைந்த அந்த சிறுவன், உனது பெற்றோரை என்ன செய்கிறேன் பார் என கூறி இந்த சம்பவத்தை செய்திருப்பதாக போலீஸ் விசாரணையில் கூறப்படுகிறது

தம்பதி இருவர் உடல்களும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து ஆத்தூர் ஊரக போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேரன், தனது தாத்தா- பாட்டியை உயிரோடு எரித்து கொன்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதையும் படியுங்கள்... ‘நீட்’ தேர்வுக்கு நிரந்தர விலக்கு பெறும் புதிய மசோதா- சட்டசபையில் தாக்கல்

Tags:    

Similar News