செய்திகள்
முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலருக்கு கொலை மிரட்டல்: மீன் வியாபாரி கைது
முத்துப்பேட்டையில் பேரூராட்சி அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மீன் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பேரூராட்சியின் சுகாதார மேற்பார்வையாளராக இருப்பவர் வீரமணி (வயது 56).
இவர் நேற்று ஆசாத்நகர் பகுதியில் துப்புரவு பணியாளர்களால் சுகாதார பணி நடைபெற்று வந்ததை பார்வையிட்டு கவனித்து வந்தார்.
அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி நவாஸ் கான்(45) என்பவர் அவரது உறவினர் வீட்டு துக்கத்தின்போது சுகாதாரப் பணி செய்யவில்லை என்று வீரமணியிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்துள்ளார்.
பின்னர் திடீரென வீரமணியை பணி செய்ய விடாமல் தடுத்து அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சிஅடைந்த சுகாதார மேற்பார்வையாளர் வீரமணி முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், வழக்குப்பதிவு செய்து மீன் வியாபாரி நவாஸ்கானை கைது செய்தார்.