உள்ளூர் செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 9 ஆயிரத்து 500 கன அடியாக குறைப்பு

Published On 2021-12-02 03:50 GMT   |   Update On 2021-12-02 03:50 GMT
மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் உபரி நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

ஒகேனக்கல்லில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. ஆனாலும் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் பரிசலில் உற்சாகமாக சென்று இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.

ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 11 ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக சரிந்து இன்று 9 ஆயிரத்து 500 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் கடந்த 14-ந் தேதி முதல் அப்படியே காவிரி மற்றும் கால்வாயில் வெளியேற்றப்படுகிறது. அதன்படி இன்றும் அணையில் இருந்து காவிரியில் 9 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கடந்த 19 நாட்களாக 120 அடியாக நீடிக்கிறது. இதனால் மேட்டூர் அணை தொடர்ந்து கடல் போல காட்சி அளிக்கிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தால் இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News