செய்திகள்
சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை -வெள்ளக்காடாக காட்சியளித்த சாலைகள்
சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று கனமழை பெய்ததால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த மூன்று நாட்களுக்கு 13 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையின் பல்வேறு இடங்களில் இன்று மதியம் மழை பெய்தது. வடசென்னையில் திருவொற்றியூர், ராயபுரம், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மத்திய சென்னையில் சில பகுதிகளில் மழை பெய்தது.
மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெளியேறும் வடிகால்களில் அடைப்பு ஏற்பட்டிருந்ததால் சாலைகள் குளம்போல் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை மெதுவாக ஓட்டிச் சென்றனர்.
வடகிழக்கு பருவமழை 28ந்தேதி வடகிழக்கு தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழைக்கு முன்னதாகவே பரவலாக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.