ஆன்மிகம்
புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம்

ஆவணி திருவிழா: புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம்

Published On 2021-08-18 08:02 GMT   |   Update On 2021-08-18 08:02 GMT
ஆவணி முதல் நாளான நேற்று புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அரண்மனை தேவஸ்தானத்துக்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது தனி சிறப்பாகும். இதனால் மூலஸ்தான அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படாமல் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆவணி திருவிழா 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள் இன்றி கொடியேற்றுவிழா எளிமையாக நடந்தது.

ஆவணி முதல் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 22-ந் தேதி சிம்ம வாகனத்திலும், இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையான வருகிற 29-ந் தேதி அன்னவாகனத்திலும் அம்மன்புறப்பாடு நடைபெற உள்ளது. அடுத்தமாதம் (செப்டம்பர்) 5-ந் தேதி சிம்மவாகனத்திலும், தொடர்ந்து விழா நாட்களில் படிச்சட்டங்களில் அம்மன்புறப்பாடு நடக்கிறது.

இந்த புறப்பாடுகள் அனைத்தும் கோவிலுக்குள் நடைபெறும். கடந்த ஆண்டை போல் இந்த ஆண்டும் வெளியில் புறப்பாடு இல்லை.

ஆவணி திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை முத்துப்பல்லக்கு விழா நடைபெற்றது.

நேற்று விடையாற்றி விழா நடைபெற்றது. இதில் புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அடுத்தமாதம் 12-ந் தேதி கோவில் வளாகத்தில் தேரோட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 14-ந் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. தெப்பத்திருவிழா நடைபெறவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News