செய்திகள்
இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதல்

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்

Published On 2021-05-11 01:15 GMT   |   Update On 2021-05-11 01:15 GMT
பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
ஜெருசலேம்:

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாகக் கருதுகிறது.
 
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலைத் தொடங்கினர். அதன்பின் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளைப் பயன்படுத்தினர். பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர்.

இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் நிலவி வருகிறது. இந்த மோதல் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இந்நிலையில், பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவத அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

மொத்தம் 7 ராக்கெட்டுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்டதாகவும், அதில் ஒரு ராக்கெட் ஜெருசலேமின் மேற்கு பகுதியில் விழுந்ததாகவும், இந்த தாக்குதலில் ஒரு வீடு தீப்பற்றி எரிந்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலின் தெற்கு பகுதியில் தொடர்ந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்படுவதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினரின் தாக்குதலுக்கு இஸ்ரேல் ராணுவம் விரைவில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மோதலால் இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Tags:    

Similar News