செய்திகள்

கோவை பஸ் நிலையத்தில் வாலிபர் படுகொலை- நண்பர் ஆத்திரம்

Published On 2019-05-16 10:56 GMT   |   Update On 2019-05-16 10:56 GMT
கோவை பஸ் நிலையத்தில் மது குடிக்கும் தகராறில் வாலிபரை படுகொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

சிங்காநல்லூர்:

கர்நாடக மாநிலம் மைசூரை சேர்ந்தவர் மாதேஷ். இவரது மகன் சுப்பன் (28). துப்புரவு தொழிலாளி. இவர் சிங்காநல்லூர் வெள்ளலூர் ரோட்டில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து வேலைக்கு சென்று வந்தார்.

சுப்பன் நேற்று மாலை வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

அவரை அவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை.

இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் பஸ் நிலையம் பகுதியில் சுப்பன் ரத்த வெள்ளத்தில்பிணமாக கிடந்தார். அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இன்ஸ்பெக்டர் ஆனந்த், சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீஸ் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. அது பஸ் நிலையத்தை சுற்றி வந்தது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சுப்பன் பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சுப்பனை கொலை செய்தது நீலிகோணம் பாளையம் வரதராஜபுரம் செட்டியார் தோட்டத்தை சேர்ந்த நடராஜன் மகன் கதிர்வேல் என்கிற சக்திவேல் (27) என்பது தெரியவந்தது.

அவரை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் போலீஸ்காரர் சுகுமார் அடங்கிய போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர்.

நானும், சுப்பனும் நண்பர்கள்.நேற்று இரவு இருவரும் மது குடிக்க சென்றோம்.அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் கல்லை எடுத்து சுப்பன் தலையில் தாக்கினேன். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

பின்னர் நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். என்னை போலீசார் கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

சிங்காநல்லூர் பஸ் நிலையத்தில் இருந்து தான் தென் மாவட்டங்களுக்கு ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் நிலையம் 24 மணி நேரமும் பரபரப்பாக காணப்படும். இந்த பஸ் நிலையம் பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் கமி‌ஷனர் அலுவலகம் அருகே கோர்ட்டில் ஆஜராகி கையெழுத்து போட்டு விட்டு வந்த 2 வாலிபர்கள் 4 பேர் கும்பலால் நடுரோட்டில் ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டப்பட்டனர்.

இதில் படுகாயம் அடைந்த 2 வாலிபர்களும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சிங்காநல்லூர் பஸ் நிலையம் பகுதியில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் கோவையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News