செய்திகள்
சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள் -எடப்பாடி பழனிசாமி
சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புவதாகவும், சிறுபான்மை மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலம்:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது; அதை சீர்குலைக்க சிலர் முயற்சிக்கின்றனர். உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெற்றது. தேர்தலில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு என மு.க.ஸ்டாலினும், திமுகவும் வேண்டுமென்றே குறை கூறுகின்றனர்.
சிஏஏ, என்ஆர்சி விவகாரத்தில் தமிழகத்தில் எந்த சிறுபான்மை மக்களும் அச்சப்பட வேண்டியதில்லை. இந்த விவகாரத்தில் சில எதிர்க்கட்சி தலைவர்கள் வதந்தி பரப்புகிறார்கள்.
கூட்டணியைப் பொருத்தவரை சில இடங்களில் விட்டுத் தரவேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எங்களைப் பொருத்தவரை மக்கள்தான் எஜமானர்கள், நீதிபதிகள். அவர்கள் எண்ணப்படி ஆட்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.