செய்திகள்
விராட் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ரோகித் சர்மா
விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு என்ற வதந்தி உள்ள நிலையில், கோலிக்கு ரோகித் சர்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி
- சமூக வலைத்தளத்தில் அனுஷ்கா சர்மாவை பின்தொடர்ந்த ரோகித் சர்மா, அதை துண்டித்தார்
- எங்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை- விராட் கோலி வெளிப்படையாக பேட்டி
விராட் கோலியின் வேலைப்பளு அதிகமாக உள்ளது. இதனால் ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்கலாம் என்ற செய்தி வெளியானது. இதற்கு உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடியது முக்கிய காரணம்.
இதற்கிடையில் உலகக்கோப்பை தொடரின்போது இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக வதந்தி பரவியது. வதந்தி பரவிக் கொண்டிருந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவை பின்தொடர்ந்து ரோகித் சர்மா அதை துண்டித்தார். இதனால் வதந்தி உண்மையாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.
இதை விராட் கோலி முற்றிலும் மறுத்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்தால் உலகக்கோப்பையில் மேலும் இரண்டு சதங்கள் அடிப்பார் என்று எப்படி கூறியிருப்பேன் என்று விராட் கோலி தெரிவித்தார்.
இதற்கிடையே தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரின்போது ரோகித் சர்மா தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறக்கப்பட்டார். ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தபோது விராட் கோலி புன்னகையுடன் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், வீரர்கள் அறையில் கதவை ரோகித் சர்மா வரும் வரை திறந்து வைத்திருந்தார்.
இந்த சம்பவங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை என்பதை காட்டியது. இந்நிலையில் இன்று 31-வது பிறந்த நாளை கொண்டாடும் விராட் கோலிக்கு ரோகித் சர்மா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இவருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
Happy birthday @imVkohli here’s wishing you a great year. God bless
— Rohit Sharma (@ImRo45) November 5, 2019