இந்தியா
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு - சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது அரசு
நாகாலாந்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் இணையதள சேவைகளை அம்மாநில அரசு தடை செய்துள்ளது.
கோஹிமா:
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ளது மோன் மாவட்டம். இந்த மாவட்டத்தின் ஒடிங் மற்றும் திரு என்ற கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் பணியாற்றி விட்டு வேன் ஒன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த பாதுகாப்புப் படையினர், வேனில் வந்த தொழிலாளர்களை கிளர்ச்சியாளர்கள் எனக்கருதி தவறுதலாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 11 பேர் வரை கொல்லப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியானது. இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது. ராணுவ வீரர் ஒருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், நாகாலாந்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக் குழு ஒன்றை அரசு அமைத்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து வதந்திகள் பரவுவதைத் தடுக்க இணையதள சேவைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்...இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி