பேரூர் அருகே கடையின் ஷட்டரை உடைத்து 50 செல்போன்களை கொள்ளையடித்த வாலிபர் கைது
கோவை:
கோவை மதுக்கரை ஸ்ரீநிவாசா நகரை சேர்ந்வர் பாலச்சந்திரன் (வயது 40). இவர் பேரூர் காளம்பாளையம் பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று பாலச்சந்திரன் வியாபாரத்தை முடித்துவிட்டு கடையை பூட்டி வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை அவரது கடைக்கு எதிரே டீ கடை வைத்து நடத்தி வரும் குமார் என்பவர் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.
உடனே அவர் பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தார்.
அவர் கடைக்கு விரைந்து வந்தார். உள்ளே சென்று பார்த்த போது கடையின் ஷட்டரை உடைத்து கடையில் இருந்து ரூ.1 லட்சத்து 97 ஆயிரம் மதிப்பிலான 50 செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து பாலச்சந்திரன் பேரூர் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.
பின்னர் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமிராக்களை ஆய்வு செய்து அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் இட்டி வயல் பகுதியை சேர்ந்த அபுல் ரியாஸ்கான் (38) என்பவர் தனது நண்பர் முகமது இயாபிர் (34) என்பவருடன் சேர்ந்து செல்போன் கடையில் கொள்ளை அடித்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அபுல் ரியாஸ்கானை கைது செய்தனர். தலைமறைவான முகமது இயாபிரை தேடி வருகின்றனர்.