செய்திகள்
கைது

வந்தவாசி அருகே கார் திருடிய சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவன் கைது

Published On 2019-10-21 09:45 GMT   |   Update On 2019-10-21 09:45 GMT
வந்தவாசி அருகே கார் திருடிய சென்னை என்ஜினீயரிங் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வந்தவாசி:

வந்தவாசி அடுத்த ஏம்பலம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருக்கு சொந்தமான காரை சென்னையில் டிராவல்ஸ் கம்பெனியில் வாடகைக்கு விட்டு இருந்தார்.

இந்த காரை இவரது மகன் விக்னேஷ் (வயது22) என்பவர் கடந்த 18-ந்தேதி வந்தவாசி ஏம்பலம் கிராமத்திற்கு கொண்டு வந்தார். காரை வீட்டின் முன்பாக நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது காரை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து விக்னேஷ் தெள்ளார் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜுலு வழக்குப்பதிவு செய்தார்.

இதுகுறித்து டி.எஸ்.பி. தங்கராமன் மேற்பார்வையில் ஏட்டுகள் தட்சிணாமூர்த்தி, முருகன், ஏழுமலை ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் கார் சென்னை பக்கமாக எடுத்து சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வழியோரம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்ததில் சென்னையில் கார் இருந்ததை கண்டுபிடித்தனர்.

காரை திருடி சென்றது அதே கிராமத்தை சேர்ந்த ஏழுமலையின் உறவினர் மகன் என்பது தெரியவந்தது.

அவர் சென்னை வண்டலூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். மாணவனை பிடித்து விசாரணை நடத்தினர். படிப்பு செலவிற்காக காரை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மாணவனை கைது செய்தனர். காரை பறிமுதல் செய்தனர்.

கல்லூரி மாணவர் ஒருவர் காரை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News