இந்தியா
குடியரசு தின விழாவின்போது திடீரென விழுந்த ட்ரோன்- 2 பேர் படுகாயம்
வேளாண்துறையின் அலங்கார ஊர்தி சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு மேல் பறந்துகொண்டிருந்த ட்ரோன் திடீரென கீழே விழுந்தது.
ஜபல்பூர்:
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் உள்ள ஸ்டேடியத்தில் இன்று குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ஊர்திகளின் அணிவகுப்பை தலைவர்கள் பார்வையிட்டனர்.
அப்போது, வேளாண்துறையின் அலங்கார ஊர்தி சென்றுகொண்டிருந்தபோது, அதற்கு மேல் பறந்துகொண்டிருந்த ட்ரோன் திடீரென கீழே விழுந்தது. இதில், பார்வையாளர் பகுதியில் இருந்த இந்து குஞ்சம் (வயது 38), கங்கோத்தி குஞ்சம் (வயது 18) ஆகியோரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு தெரிவித்தார்.
காயமடைந்த இருவரும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். குடியரசு தின விழாவில் பழங்குடியின நடனம் ஆடுவதற்காக திண்டோரி மாவட்டத்தில் இருந்து வந்திருந்தனர்.