ஒட்டன்சத்திரத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் காந்தி நகர் வண்ணாம்பாறையை சேர்ந்தவர் முனுசாமி(வயது42). ஆட்டோ டிரைவர். இவருக்கு பஞ்சவர்ணம் என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகனும் உள்ளனர். நேற்று மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூருக்கு சென்றுவிட்டனர்.
முனுசாமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். வெயில் காலம் என்பதால் வீட்டின் முன்புறம் படுத்து தூங்கியுள்ளார். இன்று காலை அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது முனுசாமி எழுந்திருக்காமல் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அருகே சென்று பார்த்த போது முனுசாமியின் மர்ம உறுப்பில் பலமாக தாக்கப்பட்டு ரத்தக்களறியாக காட்சியளித்தது. எனவே மர்மநபர்கள் இரவில் இவரை அடித்து கொன்றிருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து ஒட்டன்சத்திரம் போலீசாருக்கு புகார் அளித்தனர்.
போலீசார் விரைந்து வந்து முனுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் முனுசாமி எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.