செய்திகள்
ஜப்பான் எல்லைக்குள் தவறுதலாக டம்மி குண்டு வீசிய அமெரிக்க எப்-16 போர் விமானம்
ஜப்பான் எல்லைக்குள் அமெரிக்காவின் எப்-16 போர் விமானம் தவறுதலாக டம்மி குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோ:
ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள அமோரி மாகாணத்தின் மிசாவா என்ற விமானப்படை தளம் அமைந்துள்ளது. இங்கு அமெரிக்கா தங்கள் போர் விமானங்களை ஜப்பானின் ஒப்புதலுடன் நிறுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில், அந்த விமானத்தளத்தில் இருந்த அமெரிக்க போர் விமானங்கள் இன்று காலை வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன.
அந்த பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எப்-16 எனப்படும் அதிநவீன போர் விமானத்தில் இருந்து திடீரென தரையை நோக்கி வெடி குண்டு ஒன்று விழுந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அமெரிக்க விமானப்படை அதிகாரிகள் இது தவறுதலாக நடந்த ஒரு விபத்து என்றும் போர் விமானத்தில் இருந்து விழுந்தது டம்மி குண்டுதான் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது பாதிப்போ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.