செய்திகள்
தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணி எம்.பி.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. திடீர் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2021-11-25 08:42 GMT   |   Update On 2021-11-25 08:42 GMT
மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம் நடத்த வலியுறுத்தி கரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜோதிமணி எம்.பி. உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
கரூர்:

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கரூர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இன்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா மற்றும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.

இது குறித்து அவர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்குவதற்கான மத்திய அரசு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள முகாமில் கலந்து கொண்டு மருத்துவ சான்று பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்.

கல்வி உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சேருவது, உதவி உபகரணங்கள் பெறுவது, சக்கர நாற்காலி, பெட்ரோல் ஸ்கூட்டர், மூன்று சக்கரவண்டி, ஊன்றுகோல் கருவி, செயற்கை கால் மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் பிற உதவிகள் இந்த முகாமில் வழங்கப்படும்.

கரூர் மாவட்டத்தில் இந்த முகாமை ஒவ்வொரு இடத்திலும் நடத்த வேண்டும் என்று கரூர் மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தினேன். அவர் முகாம் நடத்த மறுத்து விட்டார். பிற மாவட்ட கலெக்டர்கள் இந்த முகாமை நடத்த ஒத்துழைப்பு தரும் நிலையில் கரூர் மாவட்ட கலெக்டர் மறுத்து வருகிறார்.

கரூர் மாவட்டம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடத்தி உதவிகளை வழங்க வேண்டும். அதற்கான தேதியை வழங்கும் வகையில் இந்த போராட்டத்தை தொடர்வேன் என்றார்‌.
Tags:    

Similar News