வழிபாடு
சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Published On 2022-02-08 07:04 GMT   |   Update On 2022-02-08 07:04 GMT
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவில் மாசி மக தெப்ப உற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 16-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.
திருப்பத்தூர் அருகே உள்ளது திருக்கோஷ்டியூர். இங்கு பிரசித்தி பெற்ற சவுமிய நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மக தெப்ப உற்சவம் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான இந்த விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு சவுமிய நாராயண பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடந்தது.

அதன் பின்னர் காலை கோவிலை சுற்றி கொடி வீதி உலா வந்து காலை 10.10 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. தொடர்ந்து கொடிமரத்தில் பால், பன்னீர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு பல்லக்கில் சாமி திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவிழா நடைபெறும் 10 நாட்களும் இரவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயார்களுடன் காட்சியளிக்கிறார். அதன்படி 2-ம் திருநாளான இன்று சிம்ம வாகனத்திலும், 3-வது நாள் அனுமன் வாகனத்திலும், 4-வது நாள் தங்க கருட சேவையிலும், 5-ம் நாள் தங்க சேஷ வாகனத்திலும் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

6-ம் திருநாளான வருகிற 12-ந்தேதி மாலையில் ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 7-ம் நாள் அன்று மாலை தெப்பக்குளத்தில் முகூர்த்த கால் நடுதல் நிகழ்ச்சியும், இரவு தங்கத் தோளுக்கினியானில் சாமி திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது.

8-ம் நாள் தங்க குதிரை வாகனத்திலும், 9-ம் நாள் காலையில் வெண்ணைத்தாழி சேவையில் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், இரவு தங்க பல்லக்கில் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சியும் நடக்கிறது. 10-ம் திருநாளான வருகிற 16-ந்தேதி காலையில் தங்கத் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், அதன் பின்னர் பகல் 10.50 மணி முதல் 11.46 மணிக்குள் பகல் தெப்பமும், இரவு 9 மணிக்கு இரவு தெப்பம் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. மறுநாள் காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியும், இரவு தங்க தோளுக்கினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

தெப்ப திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே. மதுராந்தகிநாச்சியார் உத்தரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியான் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News