செய்திகள்
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்த காட்சி.

சித்திரை விஷு பண்டிகை கொண்டாட்டம்- குமரி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

Published On 2021-04-14 09:18 GMT   |   Update On 2021-04-14 09:18 GMT
குமரி மாவட்டத்தில் கை நீட்டம் வாங்குவது மிகவும் விஷேசம் என்பதால் கோவில்களில் கை நீட்டம் பெறுவதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் கை நீட்டம் வழங்கப்பட்டது.

நாகர்கோவில்:

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று விஷூ பண்டிகை. மலையாள மாதமான மேடம் மாதம் பிறக்கும் நாள் தான் இந்த விஷூ பண்டிகை. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக கேரள மக்களால் இந்த பண்டிகை ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மேடம் மாதம் பிறக்கும் அதே நாளில் தான் தமிழ் மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த நாள் தமிழகத்தில் தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்ததாலும், மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதாலும் குமரி மாவட்ட மக்கள் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டை சித்திரை விஷுவாக கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி கேரளாவில் சித்திரை விஷு பண்டிகையும், தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டும் இன்று கொண்டாடப்பட்டது. குமரி மாவட்டத்தில் சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட்டது. அனைத்து கோவில்களிலும் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தது.

நாகர்கோவில் நாகராஜா கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், முப்பந்தல் இசக்கியம்மன் கோவில், மண்டைக்காடு பகவதியம்மன் கோவில், குமாரகோவில் முருகன் கோவில், கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் கோவில், வெள்ளிமலை முருகன் கோவில், கிருஷ்ணன்கோவில் கிருஷ்ணசாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

அவர்கள் அதிகாலையிலேயே வந்து சிறப்பு பூஜைகளில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பல கோவில்களில் கனி காணும் வைபவம் மற்றும் கைநீட்டம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் நடந்த சித்திரை விஷு பண்டிகையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

குமரி மாவட்டத்தில் கை நீட்டம் வாங்குவது மிகவும் விஷேசம் என்பதால் கோவில்களில் கை நீட்டம் பெறுவதற்காக அதிகாலையிலேயே பக்தர்கள் திரண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் கை நீட்டம் வழங்கப்பட்டது.

கோவில்களை போன்று வீடுகளிலும் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை விஷு பண்டிகை கொண்டாடப்பட்டது. விஷு தினத்தில் கனி தரிசனம் செய்தால் வீட்டில் ஆண்டு முழுவதும் ஐஸ்வர்யம் நிறைந்திருக்கும் என்பதும், நாட்டில் மழை வளம் உள்ளிட்ட அனைத்து வளங்களும் செழிக்கும் என்பதும் நம்பிக்கை.

இதனால் அனைவரும் தங்களின் வீடுகளில் பூஜை அறையில் பலவித பழங்கள் மற்றும் காய்கறிகள், தானியங்கள், ரூபாய் நோட்டுகள், நாணயங்கள், தங்க நகைகள், கொன்றை மலர்கள் உள்ளிட்டவைகளை நேற்று இரவே எடுத்து வைத்திருந்தனர். அவற்றை இன்று அதிகாலை எழுந்ததும் கண்டனர்.

பின்பு ஒருவருக்கொருவர் கை நீட்டம் வழங்கி மகிழ்ந்தனர். சிறியவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கி கை நீட்டம் பெற்றனர்.

Tags:    

Similar News