செய்திகள்
விசாரணைக்கு ஆஜராகும்படி கேரள அமைச்சர் ஜலீலுக்கு சுங்கத்துறை நோட்டீஸ்
கேரள தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் ஜலீலுக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கொச்சி:
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் தொடர்பாக என்ஐஏ, அமலாக்கப்பிரிவு மற்றும் சுங்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது. தங்க கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்படுகிறது.
தங்க கடத்தல் தொடர்பாக மாநில உயர் கல்வி அமைச்சர் ஜலீல் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் அமீரக தூதரகம் மூலம் அனுமதியின்றி குரான் புத்தகம் மற்றும் உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ததும் தெரிய வந்தது. தங்கக் கடத்தலில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், அமைச்சர் ஜலீலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் சுங்கத்துறை விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. கொச்சி சுங்கத்துறை அலுவலகத்தில் திங்கட்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு சுங்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சுங்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி, அனைவருக்கும் என்ன நடந்தது என்பதை விளக்க உள்ளதாக அமைச்சர் ஜலீல் கூறினார்.
ஏற்கனவே உயர்கல்வித்துறை அமைச்சர் ஜெலீலிடம் என்.ஐ.ஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.