செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,483 கன அடியாக சரிவு

Published On 2021-09-14 03:50 GMT   |   Update On 2021-09-14 03:50 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று விநாடிக்கு 12 ஆயிரத்து 769 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூருக்கு வருகிறது.

ஒகேனக்கல்லில் தற்போது விநாடிக்கு 11 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

மேட்டூர் அணைக்கு நேற்று 10 ஆயிரத்து 566 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 9 ஆயிரத்து 483 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் நேற்றிரவு முதல் தண்ணீர் திறப்பு 16 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. கால்வாயில் 750 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. நேற்று 75.89 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 75.36 அடியானது.
Tags:    

Similar News