செய்திகள்
கடத்தல்

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை காரில் கடத்திய கும்பல்

Published On 2021-02-20 09:11 GMT   |   Update On 2021-02-20 09:11 GMT
காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவியை பெண் வீட்டார் காரில் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குள்ளனம்பட்டி:

ஈரோடு சென்னம்பாளையத்தை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது24). இவர் உலகபுரத்தை சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரிடம் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அவரது வீட்டுக்கு செல்லும்போது உரிமையாளரின் மகள் பிரியதர்ஷினி (வயது19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இது காதலாக மாறியது.

இந்த விவகாரம் பிரியதர்ஷினியின் தந்தைக்கு தெரியவரவே எதிர்ப்பு கிளம்பியது. இருந்தபோதும் விக்னேஷ்வரன் பிரியதர்ஷினியை திருமணம் செய்ய வேண்டும் என உறுதியுடன் இருந்தார். தன்னிடம் வேலை பார்த்தவரே இதுபோல நடந்து கொண்டது உரிமையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தனது மகளை வேறு ஒரு இடத்தில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

எனவே வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி அப்பகுதியில் உள்ள கோவிலில் திருமணம் செய்து கொண்டு திருமணத்தை பதிவு செய்ய வடமதுரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்தனர். ஆனால் ஒரு சில சான்றிதழ் இல்லாததால் திங்கட்கிழமை வருமாறு அதிகாரிகள் கூறி உள்ளனர்.

பிரியதர்‌ஷனியின் தந்தையால் தங்களுக்கு ஆபத்து இருப்பதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாத காதல் ஜோடி தென்னம்பட்டியில் உள்ள விக்னேஷ்வரனின் உறவினர் வீட்டில் தங்கி இருக்க முடிவு செய்தனர். அதன்படி அங்கு சென்ற காதல் ஜோடி தென்னம்பட்டியில் தங்கினர். இந்த வி‌ஷயம் பெண் வீட்டாருக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நள்ளிரவு சமயத்தில் காரில் வந்த கும்பல் பிரியதர்ஷினியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த விக்னேஷ்வரன் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றார். தனது காதலியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என அவர் கதறினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பத்தியது.
Tags:    

Similar News