செய்திகள்
சத்குரு ஜக்கி வாசுதேவ்

கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடுங்கள் -சத்குரு வேண்டுகோள்

Published On 2020-01-14 05:08 GMT   |   Update On 2020-01-14 05:08 GMT
நகர்ப்புறங்களில் வாழும் மக்கள் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று பொங்கல் கொண்டாட வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை:

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் விழா என்பது உழவர் திருநாள். நம்முடைய தமிழ் கலாச்சாரமானது, மண்ணுடன் கலந்து  செயல் செய்து உணவு தயாரித்து முழுமையாக வாழும் கலாச்சாரம். இதை நாம் ஒருபோதும் மறக்க கூடாது. குறிப்பாக, நகரங்களில் இருப்பவர்கள் இதை ஞாபகத்தில் வைத்து கொள்ள வேண்டும். 

மாட்டு பொங்கல் அன்று சினிமா தியேட்டருக்கோ, ரெஸ்டாரண்டுக்கோ செல்வதற்கு பதிலாக, உங்களுக்கு அருகில் இருக்கும் ஏதாவது கிராமத்துக்கு சென்று கிராம மக்களுடன் சேர்ந்து பொங்கலை கொண்டாடுங்கள். குறிப்பாக, இளைஞர்கள் கிராமங்களுக்கு சென்று அங்கு நடக்கும் கொண்டாட்டங்களில் பங்கெடுக்க வேண்டும். கிராமங்களுக்கு செல்ல முடியாவிட்டால், குறைந்தபட்சம், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியையாவது உடுத்தி கொள்ளுங்கள். 

தமிழ் கலாச்சாரம், தமிழ் மொழி, தமிழ் மண்ணை நாம் இந்த தலைமுறையில் காப்பாற்றாவிட்டால், அது இல்லாமல் போய்விடும். ஒரு கலாச்சாரத்தில் ஒரு தலைமுறைக்கு தெம்பும் பெருமையும் வேண்டுமென்றால் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும். உழவர் திருநாளான இந்த பொங்கல் திருநாளில் உழவர்களுடன் ஏதோவது ஒரு வகையில் நீங்கள் தொடர்பு வைத்து கொள்ள வேண்டும். 

இந்த நோக்கத்தில் மாட்டு பொங்கல் அன்று கோவை ஈஷா யோகா மையத்தில் ஒரு பெரிய கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதில் நம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு வகையான நாட்டு மாடுகளின் கண்காட்சி நடக்க உள்ளது. இதை நீங்கள் அனைவரும் வந்து பார்க்க வேண்டும்.

இந்த புது வருடம் ஆரோக்கியமான அன்பான, எல்லாவற்றுக்கும் முக்கியமாக வெற்றிகரமாக நடக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை, அருள்.

இவ்வாறு சத்குரு கூறியுள்ளார்.

ஈஷா யோகா மையம் சார்பில் ஜனவரி 16-ம் தேதி பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மாட்டு பொங்கல் விழா மிக விமர்சையாக ஆதியோகி முன்பு நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஈஷாவில் வளர்க்கப்படும் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, குஜராத், மஹாராஷ்ட்ரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாரம்பரிய நாட்டு மாடுகளின் கண்காட்சி ஜனவரி 15-ம் தேதி மதியம் தொடங்கி ஜனவரி 17-ம் தேதி வரை நடக்க உள்ளது.

இதுதவிர, 16-ம் தேதி மலைவாழ் மற்றும் கிராமப்புற மக்கள், வெளிநாட்டினர் உட்பட பலரும் இணைந்து 40-க்கும் மேற்பட்ட மண் பானைகளில் பொங்கல் வைக்க உள்ளனர். மேலும், ஈஷா சம்ஸ்கிரிதி, ஈஷா ஹோம் ஸ்கூல், ஈஷா வித்யா பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடக்க உள்ளன.
Tags:    

Similar News