செய்திகள்
குஜராத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பிரதமர் மோடி
அகமதாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளார்.
அகமதாபாத்:
அரபிக்கடலில் உருவான டவ்தே புயல் குஜராத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.
160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்காமல் அகமதாபாத் உள்ளிட்ட பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 45 பேர் பலியாகி உள்ளனர். மாநிலம் முழுவதும் 40 ஆயிரம் மரங்கள் அடியோடு சாய்ந்து விழுந்ததோடு, சுமார் ஆயிரம் மின்கம்பங்கள் சரிந்துள்ளன. மீட்புப்பணிகளில் பேரிடர் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக பிரதமர் மோடி இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் குஜராத் மாநிலம் பாவ்நகர் வந்தார்.
பின்னர் பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் பறந்தபடி, உனா, டையு, ஜபராபாத் மற்றும் மாகுவா உள்ளிட்ட இடங்களில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டார். அகமதாபாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர், புயல் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளார். இதில் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.