உள்ளூர் செய்திகள்
சுசீந்திரம் அருகே இளம்பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு
சுசீந்திரம் அருகே மொபட் மீது மோட்டார் சைக்கிளால் மோதி இளம்பெண் கழுத்தில் கிடந்த 2 பவுன் நகை பறிப்பு - சி.சி.டி.வி. காமிரா காட்சிகள் ஆய்வு
கன்னியாகுமரி:
கொட்டாரம் அருகே வடுகன்பற்று பகுதியைச் சேர்ந்தவர் மதுவர்தினி (வயது 20). இவர் தனது தாயார் ரேணுகாவுடன் மொபட்டில் இருளப்பபுரத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் இருவரும் மொபட்டில் இரவு வீட்டிற்கு திரும்பினார்கள். சுசீந்திரம் புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் மதிவர்தினி மொபட் மீது மோதினார்கள்.
இதில் மதுவர்தினி, ரேணுகா இருவரும் நிலை தடுமாறி தவறிக் கீழே விழுந்தனர். உடனே மர்ம நபர்கள் மதுவர்தினி கழுத்தில் கிடந்த 2 பவுன் நகையை பறித்தனர். இதை-யடுத்து அவர், திருடன்... திருடன்... என கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் மொபட்டு மீது இடித்ததில் படுகாயமடைந்த ரேணுகா, மதுவர்தினி இருவரும் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்-பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரேணுகா சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடு-பட்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையர்கள் இரண்டு பேர் மோட்டார் சைக்கிளில் செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதி முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.