செய்திகள்
முக ஸ்டாலின்

வேலூர் தொகுதியில் வெற்றிக்கனி பறிப்போம் - முக ஸ்டாலின்

Published On 2019-07-22 08:24 GMT   |   Update On 2019-07-22 08:24 GMT
வேலூர் தொகுதியில் வெற்றிக்கனி பறிப்போம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

முழுமையான வெற்றியை தி.மு.க.வும் கூட்டணியும் பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் திட்டமிட்டுபழி போட்டு முடக்கப்பட்டதுதான் வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல். தி.மு.க.வைக் குறி வைத்து வேலூரில் அவதூறு பரப்பினால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் அது டெங்குக் காய்ச்சல் தொற்று போலப் பரவிப் பாதிக்கும் என நினைத்து மத்தியமாநில ஆளுந்தரப்பினரும் அதிகாரத்தைக் கையில் வளைத்து வைத்திருப்போரும் செய்த சதிதான், வேலூர் மக்களவைத் தேர்தல் நிறுத்தம்.

வேலூரில் பொய்ப்புகார் கற்பித்து, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில், அதே புகார், தேனியில் அசைக்கவியலாத ஆதாரங்களுடன் அம்பலமாயின. ஆயினும் தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது? ‘யாமறி யோம் பராபரமே’ என்ற பூஜைதான் பதில். அதன் காரணமாகத்தான் அந்த ஒற்றைத் தொகுதியில் மட்டும் சொற்ப முன்னணியில் அ.தி.மு.க.வினால் வெற்றியைக் கடைச்சரக்காக வாங்கிட முடிந்தது என்பதை வாக்காளர்கள் அறிவார்கள்.

இந்த ஆட்சி எப்போது மாறும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். ஜன நாயக முறையில் மாற்றிக் காட்டுவோம் என்பதில் தி.மு.க. மிக உறுதியாக இருக்கிறது. ஜனநாயக வழியில் கிடைக்கின்ற வாய்ப்புகளில் நாம் பெறுகின்ற வெற்றியே, இந்த ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி, அடுத்து மலர்ந்து மணம் வீசவிருக்கும் நல்லாட்சிக்கு அடித்தளமாக அமையும். அந்த வகையில், ஆகஸ்ட் 5-ந்தேதி நடைபெறும் வேலூர் மக்களவைத் தேர்தல் களம், ஜனநாயகம் நமக்கு வழங்கியிருக்கும் மேலும் ஒரு நல்வாய்ப்பாகும்.

தி.மு.க.வின் சார்பில் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் பேராதரவுடன் தம்பி கதிர் ஆனந்த் களம் காண்கிறார். கழகத்தின் மீது மீண்டும் ஏதாவது அவதூறு பரப்ப முடியுமா என அதிகார மையங்கள் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அதிகாரம் அவர்களிடம் இருந்தாலும், மக்கள் நம் பக்கமே இருக்கிறார்கள். அவர்களின் பேரன்பையும் பேராதரவையும் பெறுவது ஒன்றே நமக்கான முதன்மைப் பணி.

37 தொகுதிகளில் நாம் பெற்ற வெற்றி முழுமை பெறவும், பாராளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியான தி.மு.க.வின் பலம் மேலும் அதிகரிக்கவும், அதன் வாயிலாக தமிழ்நாட்டின் உரிமைகளையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாத்திடும் பணியை தொடர்ந்து வலிமையுடனும் வாய்மையுடனும் மேற்கொள்ளவும் வேலூர் கோட்டையை வெற்றிக்கோட்டை யாக்கிட உத்வேகத்துடன் உழைத்திடுவீர். ஆகஸ்ட் 5 வரை ஆர்வம் சிறக்க அயராது பணியாற்றி, வெற்றிக்கனியைப் பறிப்போம்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags:    

Similar News