செய்திகள்
அமைச்சர் பொன்முடி

என்ஜினீயரிங் கவுன்சிலிங் ‘ஆன்லைனில்’ நாளை தொடங்குகிறது- அமைச்சர் பொன்முடி

Published On 2021-09-14 09:00 GMT   |   Update On 2021-09-14 09:57 GMT
அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகிறது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி பதிவு கடந்த ஜூலை 26-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 24-ந்தேதி நிறைவு பெற்றது.

இதில் ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நேற்று நிறைவு பெற்றது.

என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்து கொள்ள மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாட்டில் இருந்து 529 பொறியியல் கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ.-யிடம் விண்ணப்பித்திருந்தது. இதில் 15-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உரிய சான்றிதழை சமர்ப்பிக்காததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

20-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அங்கீகார விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றது. மேலும், போதிய உள்கட்டமைப்பு, ஆசிரியர் தகுதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க ஏ.ஐ.சி.டி.இ. மறுத்து விட்டது.

இதனால், நடப்பு கல்வியாண்டில் தமிழ்நாட்டில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்கின்றன.

அதன்படி, ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்கு கிடைத்தது.

ஆனால் கடந்த ஆண்டை விட தற்போது 11 ஆயிரத்து 284 பொறியியல் இடங்கள் குறைந்துள்ளது.

கவுன்சிலிங் தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்கள் தரவரிசை பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் ஆன்-லைனில் நடைபெறும்.

முதற்கட்டமாக தொழிற்கல்வி பிரிவில் விண்ணப்பித்த 2,060, விளையாட்டு பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,190, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் பிரிவில் விண்ணப்பித்துள்ள 1,124, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் விண்ணப்பித்த 182 மாணவ- மாணவிகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை (15-ந் தேதி) தொடங்குகிறது.



அரசு பள்ளி மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேரும் விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் முதல் இடங்களை பிடிப்பவர்களுக்கு வருகிற 18-ந் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி கடிதங்களை வழங்குவார்.

வழக்கமாக அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்படுவதால் காலியாகும் இடங்கள் காலியாகவே இருக்கும்.

ஆனால் இந்த ஆண்டு இடங்கள் காலியாவதை பொறுத்து 5 முறை கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இடங்கள் குறைவாக இருந்தாலும் விண்ணப்பித்த அனைவருக்கும் சீட் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு பள்ளி மாணவர்களில் 11 ஆயிரத்து 390 பேருக்கு இடம் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News