கோவையில் தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை ஊர்வலம் - இந்து அமைப்பினர் மீது வழக்கு
குனியமுத்தூர்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி நேற்று கொண்டாடப்பட்து. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தடை செய்யப்பட்டது.
கோவையில் தடை உத்தரவை மீறி இந்து முன்னணியை சேர்ந்த ரகு, உமாபதி தலைமையில் சுந்தராபுரத்தில் இருந்து குறிச்சி குளத்துக்கு விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக வந்தனர். இதனையடுத்து போத்தனூர் போலீசார் தடையை மீறி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல், தொற்று நோயை பரப்பும் வகையில் ஊர்வலமாக வந்த இந்து முன்னணியை சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொது இடத்தில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனை மீறி சரவணம்பட்டி போலீசில் நிலையத்துக்குட்பட்ட காந்திமாநகர் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில் 5½ அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது.
இதேபோல காந்திமாநகர் வணிக வளாகம் முன்பு பாரத் சேனா சார்பில் 3½ அடியும், கணபதி பஸ் நிறுத்தத்தில் இந்து முன்னணி சார்பில் 3½ அடியும் தடையை மீறி பொது இடத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து சரவணம்பட்டி போலீசார் சிலையை தடை மீறி பொது இடத்தில் வைத்த இந்து முன்னணியை சேர்ந்த நந்தகுமார், கிருஷ்ணகுமார், பாரத் சேனாவை சேர்ந்த சபரிகீரிஷ் ஆகியோர் மீது தடை உத்தரவை மீறுதல், தொற்று நோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.