செய்திகள்
விபத்து

நாகர்கோவில் அருகே ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்: வாலிபர் பலி

Published On 2020-12-01 13:52 GMT   |   Update On 2020-12-01 13:52 GMT
நாகர்கோவில் அருகே ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவருடைய நண்பர் படுகாயம் அடைந்தார்.
மேலகிருஷ்ணன்புதூர்:

நாகர்கோவில் பறக்கை மாமூடு சந்திப்பு பகுதியை சேர்ந்த முருகன் மகன் அபிஷேக் (வயது 18). இவரும் மாவிளை காலனியை சேர்ந்த சுரேந்திரன் மகன் அர்ஜூன் (17) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். நேற்று முன்தினம் மாலை நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை அபிஷேக் ஓட்டி சென்றார். அர்ஜூன் பின்னால் அமர்ந்து இருந்தார். அவர்கள் நாகர்கோவில் அருகே பறக்கை சந்திப்பு பகுதியில் வந்தபோது, எதிரே நாகர்கோவிலில் இருந்து தெங்கம்புதூர் நோக்கி ஒரு ஆட்டோ சென்றது. எதிர்பாராத விதமாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த அபிஷேக், அர்ஜூன் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதில் அபிஷேக் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிஷேக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அர்ஜூனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News