செய்திகள்
லெபனான் போராட்டக்காரர்கள் உற்சாகக் கொண்டாட்டம்

லெபனான் பிரதமர் பதவி விலகுகிறார்- போராட்டக்காரர்கள் உற்சாக கொண்டாட்டம்

Published On 2019-10-30 08:43 GMT   |   Update On 2019-10-30 08:43 GMT
தொடர் போராட்டங்கள் காரணமாக லெபனான் பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததை போராட்டக்காரர்கள் கொண்டாடி வருகின்றனர்.
பெய்ரூட்:

லெபனான் நாட்டில்  பொருளாதார சீர்திருத்தங்கள், புதிய வரிகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தப்பட்டதற்கு எதிராக கடந்த 17 தேதி அங்கு போராட்டம் தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராடினர். போராட்டக்கார்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. நாட்டின் பல்வேறு இடங்கள் வன்முறை களமாக காட்சியளித்தன. சில இடங்களில் அமைதியான முறையில் போராட்டங்கள் நடைபெற்றன.

எல்லா மக்களுக்கும் உணவு, எரிபொருள், மற்ற அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி வைக்க வேண்டும், இல்லையேல் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று மக்கள் அரசுக்கு எதிராக முழங்கினர். இதனால் லெபனான் நாட்டில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. தொடர் போராட்டங்களால் பிரதமர் சாத் அல் ஹரிரி அரசு என்ன செய்வது என தெரியாமல் திணறியது.

இந்நிலையில், போராட்டங்கள் மேலும் வலுவடைந்த காரணத்தினால் பிரதமர் ஹரிரி பதவி விலகுவதாக நேற்று அறிவித்தார்.

தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ஹரிரி கூறியதாவது, இரண்டு வாரமாக அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதன் காரணமாக ஆட்சியை கலைக்க உள்ளேன், பதவி விலகுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்ததை அடுத்து, தலைநகர் பெய்ரூட்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள்,   கொண்டாடி வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சாலைகளில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அமைதியான போராட்டங்களை நாங்கள் நிறுத்தப்போவதில்லை. ஆட்சி முறையில் உண்மையான மாற்றங்கள் நிகழும்போது நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

ஹரிரியின் அறிவிப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர், போராட்டக்காரர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை மர்ம நபர்கள் சிலர் தாக்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News