செய்திகள்
கோப்புபடம்

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2021-10-08 07:35 GMT   |   Update On 2021-10-08 07:35 GMT
பள்ளி படிப்பு உதவித்தொகை பெறும் மாணவர்கள் நவம்பர் 15-ந்தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் பள்ளி படிப்புக்கு 2021-22 ம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைன் மூலம் நவம்பர் 15-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதன்படி ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி படிப்புக்கான கல்வி உதவித் தொகையும், பிளஸ்-1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழில் கல்வி, பாலிடெக்னிக், செவிலியர்,ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை உள்பட) பயில்பவர்களுக்கு கல்வி உதவித் தொகையும், தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயிலும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் www.minorityaffairs.gov.in.schemes இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஆகவே, பள்ளி படிப்பு உதவித்தொகை பெறும் மாணவர்கள் நவம்பர் 15-ந்தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு நவம்பர் 30-ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421-2999130 என்ற எண்ணில் தொடர்பு  கொள்ளலாம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News