செய்திகள்
இடைத்தரகர் ஜெயக்குமார்

இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தனுக்கு 5 நாள் போலீஸ் காவல்

Published On 2020-03-03 03:32 GMT   |   Update On 2020-03-03 03:32 GMT
வி.ஏ.ஓ. தேர்வு முறைகேடு வழக்கில் இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சைதாப்பேட்டை கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆலந்தூர்:

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4, குரூப்-2ஏ தேர்வில் தேர்ச்சி பெற இடைத்தரகர்கள் மூலமாக முறைகேடுகள் நடந்ததாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடியில் ஈடுபட்டதாக இடைத்தரகர்கள், அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசு பணியில் இருந்தவர்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான இடைத்தரகர் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பின்னர், மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இடைத்தரகர்கள் ஜெயக்குமார், ஓம் காந்தன் ஆகியோர் கிராம நிர்வாக அதிகாரி(வி.ஏ.ஓ.) தேர்விலும் முறைகேடு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் ஜெயக்குமார், ஓம் காந்தன் இருவரையும் சைதாப்பேட்டை பெருநகர 11-வது கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் அரசு வக்கீல் மேரி ஜெயந்தி ஆஜராகி, 2 பேரையும் கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முறைகேடு வழக்கில் 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்தார்.

இதுபற்றி மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், 2 பேரிடமும் கேட்டபோது, ‘‘ஏற்கனவே 2 வழக்கில் போலீசார் காவலில் வைத்து விசாரித்துவிட்டனர். மீண்டும் போலீஸ் காவலில் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை’’ என்றனர்.

உடனே சி.பி.சி.ஐ.டி. தரப்பு வக்கீல் மேரி ஜெயந்தி, ‘‘கிராம நிர்வாக அதிகாரி தேர்வு முறைகேடு வழக்கில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்படவேண்டியது இருக்கிறது. இருவரையும் இளையான்குடி அழைத்துச்சென்று விசாரிக்க வேண்டியது இருப்பதால் 7 நாள் போலீஸ் காவல் வழங்கவேண்டும்’’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட்டு ராஜ்குமார், இடைத்தரகர் ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தன் ஆகியோரை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
Tags:    

Similar News