செய்திகள்
இலங்கை வீரர்கள்

டி20 உலகக் கோப்பை முதல் சுற்று நிறைவு- நெதர்லாந்து அணியை ஊதி தள்ளியது இலங்கை

Published On 2021-10-22 16:34 GMT   |   Update On 2021-10-22 16:34 GMT
முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ஓவர்களில் 44 ரன்களுக்குள் சுருண்டது.
சார்ஜா:

டி20 உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்தன. ஸ்காட்லாந்து, வங்காளதேசம், இலங்கை மற்றும் நமீபியா ஆகிய 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. 

இந்நிலையில், முதல் சுற்றின் கடைசி லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் உள்ள இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதின.

ஷார்ஜாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தது.  முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி, இலங்கை பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. கொலின் ஆக்கர்மேன் (11) தவிர மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 10 ஓவர்களில் 44 ரன்களுக்குள் சுருண்டது. 

இதையடுத்து 45 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீரர் நிசங்கா ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அசலங்கா 6 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடிய குசால் பெரேரா ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுக்க, இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Tags:    

Similar News