செய்திகள்
தீ விபத்து நிகழ்ந்த பராமரிப்பு இல்லம்

செக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் தீ விபத்து - 8 பேர் பலி

Published On 2020-01-19 19:17 GMT   |   Update On 2020-01-19 19:17 GMT
செக் குடியரசில் பராமரிப்பு இல்லத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பிரேக்:

செக் குடியரசு நாட்டில் ஜெர்மனி எல்லைப்பகுதியில் அமைந்துள்ள நகரம், வெஜ்பிரிட்டி. அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், உடல் உறுப்புகள் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் ஒரு பராமரிப்பு இல்லம் இயங்கி வந்தது.

இந்த இல்லத்தில் உள்ள ஒரு அறையில் நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென அந்த இல்லம் முழுவதும் பரவியது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு எழுந்தனர். பலர் தீயில் சிக்கினர். ஒரு சிலர் மட்டும் அங்கிருந்து தப்பினர். மோசமான வானிலை காரணமாக மீட்பு பணியில் ஹெலிகாப்டர்களை ஈடுபடுத்த இயலவில்லை என்றும், 7 மீட்பு குழுக்கள் அங்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தீயணைக்கும் படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த கோர தீ விபத்தில் உடல் கருகியும், மூச்சு திணறியும் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 29 பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்சுகளில் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 
Tags:    

Similar News