செய்திகள்
நமக்கு நாமே திட்டம் - வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள திருப்பூர் மாநகராட்சி அழைப்பு
நீர் நிலைகள் தூர் வாருதல், சேதமான ரோடுகள், கழிவுநீர் கால்வாய், சிறுபாலம் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் இணைந்து வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நமக்கு நாமே திட்டத்தின் மூலம் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்கள் 33 சதவீதம் பங்களிப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளவும், 50 சதவீதம் பங்களிப்பு வழங்கும் பணிகளை அவர்களே மேற்கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
நீர் நிலைகள் தூர் வாருதல், சேதமான ரோடுகள், கழிவுநீர் கால்வாய், சிறுபாலம் சீரமைத்தல், போக்குவரத்து சிக்னல், தெருவிளக்கு அமைத்தல், குடியிருப்பு பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைத்தல், பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் அமைத்தல், பள்ளிகளில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளுதல், நவீன நூலகம் மற்றும் அறிவு சார் மையம் அமைத்தல், பொதுக் கழிப்பிடம் அமைத்தல் ஆகிய பணிகள் இதில் மேற்கொள்ளலாம்.
மேலும் உரிய நீர்ப்பாசன வசதி மற்றும் முறையான மரக்காவலர்களுடன் மரக்கன்று அமைக்கலாம். இது போன்ற பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகள், தன்னார்வலர்கள், சமூக சேவை அமைப்புகள் உள்ளிட்டோர் இதில் தங்களை இணைத்துக்கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மண்டல உதவி கமிஷனர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.