உள்ளூர் செய்திகள்
திருநாவலூரில் சூதாட்ட கும்பல் சிக்கியது- பணம் பறிமுதல்
திருநாவலூரில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
திருநாவலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்ரமணியன் மேற்பார்வையில் கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டை திருநாவலூர் உள்ளிட்ட பகுதிகளில் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி திருநாவலூர் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட எம். குன்னத்தூர் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் சில மர்ம நபர்கள் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு 100-க்கும் மேற்பட்டோர் சூதாடி கொண்டிருப்பது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் சூதாடி கொண்டிருந்தவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர்.
சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்று 5 பேரை மட்டும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் கொக்கான்காடு பகுதியை சேர்ந்த ஏழுமலை (வயது 55) ரிஷிவந்தியம் பாடியை சேர்ந்த மணிகண்டன் (43) எல்லை கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை(37) குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அன்பழகன் (44) மற்றும் முருகன் (45) என்பது தெரியவந்தது. மேலும் போலீசார் அவர்களிடம் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் 6 செல்போன்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.