செய்திகள்
ரேஷன் அரிசியை பதுக்கி விற்பனை செய்யும் கும்பல்
ரேஷன் கடை முறைகேடு குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்பதில்லை.
திருப்பூர்:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதனை பொதுமக்கள் பலர் வாங்கி பயன்படுத்துகின்றனர். சிலர் விற்பனை செய்தும் வருகின்றனர். இந்தநிலையில் திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ரேஷன் அரிசிக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஒரு கிலோ ரேசன் அரிசியை ரூ.10 வரை விலைகொடுத்து வாங்கிக்கொள்கின்றனர்.
மேலும் பனியன் நிறுவனங்கள், மில்களில் தங்கியிருக்கும் வடமாநில தொழிலாளர்கள் ரேஷன் கடைகளில் இருந்து முறைகேடாக அரிசியை பெற்று வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. நடுத்தர மக்கள் ரேஷன் அரிசியை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதேநேரம் அரிசி பெறாத கார்டுகளை சேகரிக்கும் புரோக்கர்கள் ரேஷன் பணியாளருடன் கைகோர்த்து அரிசி கடத்தலில் ஈடுபடுகின்றனர். கடத்தல் அரிசியை பதுக்கி வைத்து வடமாநில இளைஞர்களுக்கு விற்றுவிடுகின்றனர். எனவே அரிசி கடத்தலையும், முறைகேடுகளையும் தடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,ரேஷன் கடை முறைகேடு குறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டால் அழைப்பை ஏற்பதில்லை. ரேஷன் கடைகளில் செல்போன் எண்களை சரியாக எழுதி வைத்து அதன்வாயிலாக புகார் அளிக்கும் போது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.