திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 டன் மஞ்சள் பறிமுதல்- லாரி டிரைவர் கைது
திருச்செந்தூர்:
இலங்கையில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக மஞ்சள் மூட்டைகள் கடத்தப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.
இந்நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினத்தில் கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக திருச்செந்தூர் கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்று அதிகாலை காயல்பட்டினம் -ஓடக்கரை கடற்கரை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது ஒரு லாரியில் இருந்து வெள்ளை சாக்கு மூட்டைகளை படகில் ஏற்றுவது தெரியவந்தது.
அதில் 140 மூட்டைகளில் 5 டன் மஞ்சள் இருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சமாகும். போலீசாரை பார்த்ததும் அங்கிருந்தவர்கள் படகு மூலம் தப்பி ஓடினர்.
இதனையடுத்து போலீசார் மஞ்சள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உடன்குடி சுல்தான் நகர் பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலமுருகனை கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் லாரி சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 9-ந் தேதி திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை இருந்து கடத்தப்பட இருந்த 1800 கிலோ விராலி மஞ்சளை திருச்செந்தூர் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இன்று 5 டன் மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.