செய்திகள்
நாம் விவசாயிகளின் மகள்கள்... அவர்களுக்காக இன்று போராட உள்ளோம் - ஷாஹீன் பாக் செயற்பாட்டாளர் பேட்டி
நாம் விவசாயிகளின் மகள் என்றும் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் ஷாஹீன் பாக் போராட்டத்தில் பங்கேற்ற செயற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 6-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இதனால், அரியானா-டெல்லி எல்லைகள், உத்தரபிரதேசம்-டெல்லி எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய குழு தலைவர்களுக்கு மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை தீர்வு எட்டப்படாவிட்டால் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் டெல்லியில் நடைபெற்ற ஷாஹீன் பாக் போராட்டம் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் மிகவும் பிரபலமானவர் 82 வயது நிரம்பிய சமூகசெயற்பாட்டாளரான மூதாட்டி பில்கிஷ் டாடி.
இவர் தற்போது நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் அவர் கூறியதாவது:-
நாம் விவசாயிகளின் மகள்கள், அவர்களுக்கு ஆதரவாக இன்று போராட்டம் நடத்த உள்ளோம். நாம் நமது குரலை உயர்த்துவோம். அரசு நமது பேச்சை கேட்கவேண்டும்.
என்றார்.