செய்திகள்
கோப்பு படம்

ரவுடி வெட்டிக்கொலை - திருவையாறு கோர்ட்டில் 5 பேர் சரண்

Published On 2019-11-05 11:53 GMT   |   Update On 2019-11-05 11:53 GMT
குடவாசல் அருகே ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக திருவையாறு கோர்ட்டில் 5 பேர் சரணடைந்தனர்.
குடவாசல்:

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள களப்பாளகரம் நடுத்தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 46). கடந்த 2007-ல் நடந்த முஷ்டகுடி ஆசிர்வாதம் தியாகராஜன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மோகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை பெற்றவர்களை அரசு விடுதலை செய்தபோது மோகனும் விடுதலை பெற்றுள்ளார். பின்னர் கடந்த ஆண்டு சிறையில் இருந்து விடுதலையாகி வந்த மோகனுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

சம்பவத்தன்று இவர் தனது காரில் பரவக்கரை கருவேலி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த ஒரு ஆட்டோ காரை வழிமறித்து முன்னால் நின்றது. ஆட்டோவில் இருந்து இறங்கிய 5 பேர் கொண்ட கும்பல் மோகனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் சம்பவ இடத்திலேயே மோகன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து எரவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். 2007-ல் நடந்த கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக மோகன் கொலை செய்யப்பட்டாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி. சுகுமார் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் போலீசார் தேடினர்.

கொலையில் தொடர்புடைய குத்தாலம் முஷ்டகுடியை சேர்ந்த ஆசிர்வாதம் மகன் அந்தோணிசாமி (39), சுரேந்தர் (27), வயலூர் கேசவன்(39), கோனேரிராஜபுரம் கவியரசன், மயிலாடுதுறையை சேர்ந்த கலைவாணன் (35) ஆகிய 5 பேர் திருவையாறு நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் 5 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்பேரில் 5 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News