கோபி அருகே விபத்து- வங்கி ஊழியர் பலி
கோபி:
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 31) ஒரு வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
இவரது மனைவி பூரணி (34). இவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களின் மகன் விஜய் (8).
இவர்கள் 3 பேரும் கடந்த 3-ந் தேதி மோட்டார் சைக்கிளில் ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஒரு உறவினர் வீட்டுக்கு வந்தனர்.
பிறகு 3 பேரும் ஊருக்கு மோட்டார் சைக்களில் திரும்பி சென்று கொண்டிருந்தனர்.
கோபி அருகே உள்ள ஒத்தக்குதிரை பஸ் நிறுத்தம் அருகே வந்த போது எதிரே வந்த ஒரு கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கந்தசாமி உள்பட 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.
மேலும் அவர்கள் மீது மோதிய கார் நிலை குலைந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் மேலும் காரில் வந்த சதாசிவம், ராஜு, இவரது மனைவி சரஸ்வதி ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இவர்கள் 6 பேரையும் அக்கம்-பக்கத்தினர் மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பிறகு மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி வங்கி ஊழியர் கந்தசாமி பரிதாபமாக இறந்தார். மற்றவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.