லைஃப்ஸ்டைல்
பொட்டு வைத்த முகமோ..

பொட்டு வைத்த முகமோ..

Published On 2020-08-12 04:11 GMT   |   Update On 2020-08-12 04:11 GMT
பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
பொட்டு, முகத்திற்கு முழு அழகைத் தருகிறது. எவ்வளவு சிறப்பாக ‘மேக்கப்’ போட்டிருந்தாலும், விலை உயர்ந்த புடவையை உடுத்தியிருந்தாலும், ஆபரணங்களை அடுக்கி அணிந்திருந்தாலும் நெற்றியில் ஒரு பொட்டு வைக்காவிட்டால், அனேகமானவர்களுக்கு அழகில் முழு திருப்தி தோன்றுவதில்லை.

இந்திய பெண்கள் பெரும்பாலும் பொட்டுவைத்த முகத்தோடுதான் காணப்படுகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போதும் பொட்டுவைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதால், அதை பார்க்கும் வெளிநாட்டு பெண்கள் ‘பொட்டின் தத்துவம் என்ன?’ என்ற கேள்வியை அவர்களிடம் எழுப்புவார்கள். அதற்கு விளக்கம் சொல்ல தெரிந்துவைத்திருக்கவேண்டியதிருக்கும். தற்போது வெளிநாட்டு பெண்களும் பொட்டின் அழகை போற்றத் தொடங்கிவிட்டதால், இந்தியாவிற்கு வந்தால் அவர்களும் பொட்டு வைத்த முகத்தோடு வலம்வருவது உண்டு.

முன்பு சாந்துப்பொட்டு, சந்தனப்பொட்டு, சிந்தூரம் போன்ற சில வகைகளே வழக்கத்தில் இருந்தன. தற்போது காலமாற்றத்திற்கு ஏற்ப பொட்டுகளும் விதவிதமான வடிவங்களில் வெளிவருகின்றன. விலை மதிப்புள்ள ஆபரணங்களுக்கு நிகராக இப்போது ஆபரண பொட்டுகளும் தயாரிக்கிறார்கள். பல வண்ணங்களில், வடிவங்களில் அவை தயார்செய்யப்படுகின்றன. பலவித கற்களையும், முத்துக்களையும் அதில் பதிக்கிறார்கள். சிற்ப வேலைப்பாடு கொண்ட பொட்டுகளும், தங்கமுலாம் பூசப்பட்ட பொட்டுகளும் அவைகளில் குறிப்பிடத்தக்கதாகும்.

பெயரளவுக்கு ஏதோ ஒரு பொட்டை வைக்கும் நிலையில் இன்றைய பெண்கள் இல்லை. தங்கள் அந்தஸ்து, முகம், சரும நிறம், அணிந்திருக்கும் உடைக்கு ஏற்ற விதத்தில் பொட்டுகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

பொட்டு தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் சில உண்டு. முக்கியமாக முகத்தின் அமைப்பை கருத்தில்கொண்டு அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் பொட்டு அமையவேண்டும். புருவத்தை நன்றாக சீவி அழகுபடுத்திவிட்டுதான் பொட்டை ஒட்டவேண்டும். இயல்பான பொட்டுகளே முகத்திற்கு கூடுதல் அழகு தரும்.

சிலருக்கு பொட்டு அலர்ஜியை ஏற்படுத்தும். அப்படிப்பட்டவர்களும் இப்போது கவலைப்படவேண்டியதில்லை. ஐலைனரும், ஐபென்சிலும் இப்போது பல நிறங்களில் கிடைக்கின்றன. உடுத்தும் உடைகளுக்கு ஏற்ப அவைகளை பயன்படுத்தி பொட்டுகளை வரைந்துகொள்கிறார்கள்.

சதுர வடிவ முக அமைப்பு கொண்டவர்களுக்கு அதிக நீளமில்லாத, சற்று அகலமுள்ள பொட்டு கூடுதல் அழகு தரும். நீளமான, அகலம் குறைந்த பொட்டுகள் அவர்களது முகத்திற்கு எடுப்பாக இருக்காது. வட்டமான பொட்டுகளே அவர்களுக்கு பெரும்பாலும் பொருந்தும்.

உருண்டையான முக அமைப்பு கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் ஏற்றது. உருண்டை முகத்திற்கு இது வித்தியாசமான தோற்றத்தை ஏற்படுத்தும். சுருங்கிய நெற்றி அமைப்பு கொண்ட பெண்கள் புருவங்களுக்கு நடுவில் பொட்டு வைக்கவேண்டும்.

முட்டை வடிவ முகம் கொண்டவர்களுக்கு எல்லாவிதமான பொட்டுகளும் பொருத்தமாக இருக்கும். விசாலமான நெற்றி அமைந்தவர்களுக்கு நீளமான பொட்டுகள் கூடுதல் அழகு தரும். முக்கோண வடிவ பொட்டுகளும் பொருந்தும். விசாலமான நெற்றியை கொண்டவர்கள் புருவங்களில் இருந்து ஒரு செ.மீ. உயரத்திற்கு மேல் பொட்டுவைப்பது நல்லது.

இதய வடிவ முகம் கொண்டவர்களுக்கு நீண்ட பொட்டுகள் பொருந்தும். முக வடிவத்திற்கு ஏற்ப பொட்டுவைக்கும்போது அது சரும நிறத்திற்கும் பொருந்தும் விதத்தில் இருக்கிறதா என்றும் கவனிக்கவேண்டும். உடுத்தும் உடையின் நிறத்திற்கும், பொட்டின் நிறத்திற்கும் பொருத்தம் இருக்கவேண்டும். கோதுமை நிற பெண்களுக்கு எல்லா நிற பொட்டுகளும் நன்றாக இருக்கும். பொட்டு முகத்திற்கு கூடுதல் பொலிவு தருவதால் அதற்கு பெண்கள் அதிக முக்கியத்துவம் தருகிறார்கள். 
Tags:    

Similar News