உள்ளூர் செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோவையில் 19ந் தேதி விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடுகிறார்

Published On 2022-05-06 05:14 GMT   |   Update On 2022-05-06 05:14 GMT
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து 19ந் தேதி கோவை மாவட்டம் வருகிறார். அன்றைய தினம் கோவை அன்னூர் அருகே உள்ள பெரியபுத்தூரில் நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

கோவை:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருகிற 20ந் தேதி மலர் கண்காட்சி நடக்கிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர்க்கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைக்கிறார்.

இதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து 19ந் தேதி கோவை மாவட்டம் வருகிறார். அன்றைய தினம் கோவை அன்னூர் அருகே உள்ள பெரியபுத்தூரில் நடைபெறும் விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

அங்கு நடைபெறும் விழாவில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் புதிய போர்வெல்களை இயக்கி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், வேளாண்மை துறையினரும் செய்து வருகின்றனர். தரிசு நில மேம்பாட்டு திட்டத்தில் போர்வெல்கள் அமைய உள்ள மதுவாணன் குட்டையை கலெக்டர் சமீரன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடும் பெரியபுத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தையும் அவர் ஆய்வு செய்தார்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண் இணை இயக்குனர் சித்ரா தேவி மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News