செய்திகள்
விவசாய நகை கடன்- முறையாக திரும்ப செலுத்தியவர்களுக்கு 3 சதவீதம் மானியம்
கொரோனா 2-வது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
சென்னை:
விவசாயிகளுக்காக, 7 சதவீத வட்டியில், விவசாய நகை கடன் வழங்கப்படுகிறது. இதில் முறையாக திரும்ப செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாய நகை கடனுக்கான வட்டி விகிதத்தில் 5 சதவீதத்திற்கான வட்டி தொகையை வங்கிகளுக்கு மத்திய அரசு வழங்குகிறது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.
இதனால், விவசாய நகை கடன்களுக்கு வழங்கப்பட்ட மானியம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. கொரோனா 2-வது அலை காரணமாக விவசாய நகை கடன்களை முறையாக செலுத்த முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர்.
இதனால், கடந்த மார்ச் 1-ந் தேதி முதல் வருகிற 30-ந் தேதி வரையிலான தேதிகளில் நகை கடன்களுக்கான 7 சதவீத வட்டியில் 3 சதவீதம் மானியமாக வழங்க நபார்டு வங்கி சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
இதனால், நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.