வழிபாடு
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் வலிய படுக்கை பூஜை

Published On 2022-04-04 04:46 GMT   |   Update On 2022-04-04 04:46 GMT
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. கோவில் மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

இங்கு மாசிக்கொடை விழா கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.

இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

வலிய படுக்கை பூஜை வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும்.

அதாவது மாசித் திருவிழாவின் ஆறாம் நாள், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், பரணி கொடைவிழா அன்றும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. கோவில் மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
Tags:    

Similar News