செய்திகள்
வாக்குப்பதிவு எந்திரம்

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டீல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் தூங்கிய தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட்

Published On 2021-04-06 09:17 GMT   |   Update On 2021-04-06 09:17 GMT
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை முற்றிலும் மீறுவதாகும். அதற்காக துறை அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மற்றும் பெரிய தண்டனை அவருக்கு விதிக்கப்படும்.
கொல்கத்தா:

திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவரான தனது உறவினரின் வீட்டில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துடன் (ஈ.வி.எம்) இரவில் தூங்கியதாகக் கூறப்படும் மேற்குவங்க தேர்தல் அதிகாரியை தேர்தல் ஆணையம் இடைநீக்கம் செய்துள்ளது. அந்த ஈ.வி.எம் மற்றும் விவிபேட் இந்த தேர்தலில் பயன்படுத்தப்படாது என தேர்தல் ஆணையம் இன்று காலை அறிவித்தது.

மேற்கு வங்கத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று மூன்றாம் கட்ட தேர்தல் அங்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உலுபீரியா உத்தரில் தேர்தல் துணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த தபான் சர்கார், நேற்று இரவு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதியான தனது உறவினரின் வீட்டில் தூங்குவதற்காக ஈ.வி.எம்-உடன் சென்றதாக தெரிகிறது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், “இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களை முற்றிலும் மீறுவதாகும். அதற்காக துறை அலுவலர் இடைநீக்கம் செய்யப்பட்டார். மற்றும் பெரிய தண்டனை அவருக்கு விதிக்கப்படும். அதிகாரியுடன் இணைக்கப்பட்ட துறை போலீசாரையும் சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News