செய்திகள்
திருப்பயர் கிராமத்தில் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரித்த போது எடுத்த படம்.

நல்லூர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா தேர்தல் பிரசாரம்

Published On 2021-03-26 20:50 GMT   |   Update On 2021-03-26 20:50 GMT
நல்லூர் பகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விருத்தாசலம்:

விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் நேற்று நல்லூர் ஒன்றியம் கண்டப்பங்குறிச்சி கிராமத்தில் வாக்கு சேகரிப்பை தொடங்கிய அவர் புடையூர், வரம்பனூர், கொத்தனூர், திருப்பயர், நாரையூர், வேப்பூர் கூட்ரோடு, வேப்பூர், பெரியநெசலூர், சிறுநெசலூர், பூலாம்பாடி, நிராமணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தே.மு.தி.க. மற்றும் அ.ம.மு.க. நிர்வாகிகளுடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திருப்பயர் கிராமத்திற்கு சென்ற அவரை பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பொதுமக்களுக்கு பொன்னாடை அணிவித்து வாக்கு சேகரித்து வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

விஜயகாந்திற்கு முதல் வெற்றியை கொடுத்தீர்கள். எனக்கும் முதல் வெற்றியை கொடுத்தது விருத்தாசலம் தொகுதி என்ற சரித்திரத்தை ஏற்படுத்தி தரவேண்டும். இந்த ஒரு பெண்ணின் வெற்றி ஒட்டுமொத்த பெண்களின் வெற்றி. என்னுடைய ஒரு குரல் கோடிக்கணக்கான பெண்களின் குரலாக எனக்கு ஒரு வாய்ப்பைக் கொடுங்கள். நிச்சயமாக உங்களுக்காக உழைப்பதற்கு தயாராக இருக்கிறேன். ஜாதி இனம் மதம் மொழி எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு அனைவரும் ஒரே இனம், ஒரே குலம் என பயணிப்போம். வெற்றியை காண்போம். தொகுதியையும் மக்களையும் முன்னேற்றுவோம். மாபெரும் வெற்றியை கேப்டன் விஜயகாந்துக்கு கொடுத்தது போல முரசு சின்னத்திற்கு வாக்களித்து வெற்றியை தந்து முரசு வென்றது என்ற சரித்திரத்தை தாருங்கள். 

இவ்வாறு அவர் பேசினார். 

இதையடுத்து அவர் திருப்பயர் கிராமத்தில் அமைந்துள்ள சேவியர் உலகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Tags:    

Similar News